Tuesday, September 22, 2015

சிறப்பு கலப்பு நீதி­மன்றம் மைத்­திரி அர­சுக்கு சோதனை

சர்­வ­தேச அள­விலும் இலங்­கை­யிலும் பெரும் பர­ப­ரப்­புடன் எதிர்­பார்க்­கப்­பட்ட ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் பணி­ய­கத்தின், அறிக்கை- ஆறு மாத கால தாம­தத்தின் பின்னர் ஒரு­வ­ழி­யாக வெளி­யாகி விட்­டது.
2002 பெப்­ர­வரி தொடக்கம் 2011 நவம்பர் வரை­யான காலப்­ப­கு­தியில், இடம்­பெற்ற சம்­ப­வங்கள், மீறல்கள் தொடர்­பான குற்­றச்­சாட்­டுகள் தொடர்­பாக, சன்ட்ரா பெய்டாஸ் தலை­மை­யி­லான- ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­யாளர் பணி­ய­கத்தின் விசா­ரணைக் குழு, மார்டி அதி­சாரி, அஸ்மா ஜஹாங்கீர், சில்­வியா கார்ட்ரைட் ஆகிய மூன்று வெளி­யக நிபு­ணர்­களின் மேற்­பார்­வையில் மேற்­கொண்ட விசா­ர­ணை யின் அறிக்கை இது.
261 பக்­கங்­களில் வெளி­யா­கி­யி­ருக்கும் இந்த அறிக்­கையில், சாட்­சி­யங் கள், ஆதா­ரங்கள், கண்­ட­றி­வுகள் என்று 1281 குறிப்­புகள் இடம்­பெற்­றுள்­ளன. இவற்றின் அடிப்­ப­டையில், 39 பரிந்­து­ரை­க­ளையும் இந்த அறிக்கை முன்­வைத்­தி­ருக்­கி­றது.
இந்த அறிக்­கையின் அடிப்­ப­டையில், விசா­ரணை செய்­யப்­பட்ட 9 ஆண்டு காலப் பகு­தியில், இடம்­பெற்ற சம்­ப­வங்கள், அரச­ப­டைகள், அவர்­க­ளுடன் சேர்ந்து இயங்­கிய துணை ஆயு­தக்­கு­ழுக்கள், விடு­தலைப் புலி­களால் இழைக்­கப்­பட்ட மீறல்­களை, நீதி­மன்ற விசா­ர­ணைக்­குட்­ப­டுத்தும் போது, அவை போர்க்­குற்­றங்கள், அல்­லது மனித குலத்­துக்கு எதி­ரான குற்­றங்­க­ளா­கவே கரு­தப்­படும் என்றும் தெளி­வாகக் கூறப்­பட்­டுள்­ளது.
நீதிக்குப் புறம்­பான படு­கொ­லைகள், கட்­டா­ய­மாக காணா­மற்­போகச் செய்­யப்­ப­டுதல், பாலியல் வல்­லு­ற­வுகள் மற்றும் பாலின ரீதி­யான குற்­றங்கள், கண்­ட­படி நடத்­தப்­பட்ட பீரங்கித் தாக்­கு­தல்கள், சிறார்­களைப் படையில் சேர்த்­தமை, நட­மாடும் சுதந்­திரம் கட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டமை, உணவு, மருந்து போன்ற அடிப்­படை வச­திகள் மறுக்­கப்­பட்­டமை என்று போர்க்­குற்­றங்கள் அல்­லது மனி­த­கு­லத்­துக்கு எதி­ரான குற்­றங்­க­ளாக நிரூ­பிக்­கப்­படக் கூடி­ய­வற்றை இந்த விசா­ரணை அறிக்கை பட்­டி­ய­லிட்­டுள்­ளது.
போர்க்­குற்­றங்கள் நடந்­துள்­ளன என்று நேர­டி­யாகக் கூறா­வி­டினும், மறை­மு­க­மாக அதற்­கான வாய்ப்­புகள் உள்­ளதை இந்த அறிக்கை தெளி­வா­கவே பட்­டி­ய­லிட்­டுள்­ளது.
அதே­வேளை, இதில் யாரு­டைய பெயரும் குற்­ற­வா­ளி­க­ளாக குறிப்­பி­டப்­ப­ட­வில்லை. ஏனென்றால், இது குற்­ற­வியல் விசா­ரணை அல்ல. அத்­த­கைய விசா­ரணை ஒன்றில் தான், குற்­ற­வா­ளிகள் என்று பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­படும்.
கிட்­டத்­தட்ட 3,000 சாட்­சி­யங்­களில் இருந்து பெறப்­பட்ட தக­வல்­களின் அடிப்­ப­டையில் இந்த அறிக்கை தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது.
இந்த சாட்­சி­யங்­களின் போது, இது­வரை வெளி­வ­ராத பல தக­வல்கள், ஆதா­ரங்­களும் கூட ஆணைக்­கு­ழு­வுக்கு கிடைத்­தி­ருந்­தன.
இது­வரை பகி­ரங்­கப்­ப­டுத்­தப்­ப­டாத- பொதுப்­பார்­வைக்கு வராத, ஒளிப்­ப­டங்கள், வீடி­யோக்கள், செய்­ம­திப்­ப­டங்கள் கூட, இந்த விசா­ர­ணையின் போது ஆரா­யப்­பட்­ட­தா­கவும், இரா­ணுவ நிபு­ணர்கள், தட­ய­வியல் நிபு­ணர்கள் மூலம் அவை உறுதி செய்­யப்­பட்­ட­தா­கவும், ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் தெரி­வித்­துள்ளார்.
இவற்றின் அடிப்­ப­டையில் தான், கண்­ட­படி பீரங்கித் தாக்­குதல் நடத்­தப்­பட்­டமை, நீதிக்குப் புறம்­பான படு­கொ­லைகள் இடம்­பெற்­றமை போன்ற குற்­றச்­சாட்­டுக்­களை இந்த அறிக்கை முன்­வைத்­தி­ருக்­கி­றது.
இந்த அறிக்கை இலங்கை அர­சாங்­கத்­தினால் முற்­று­மு­ழு­தாக நிரா­க­ரித்து விட முடி­யாத ஒன்­றா­கவும் மாறி­யி­ருக்­கி­றது.
அதனால் தான், ஒரே­ய­டி­யாக இதனை அர­சாங்கம் நிரா­க­ரிக்­க­வில்லை. என்­றாலும், சில குற்­றச்­சாட்­டுக்கள் குறித்தும், பரிந்­து­ரைகள் குறித்தும் எதிர்ப்­புகள் கிளம்­பவே செய்­கின்­றன.
படை­யினர் மீதான போர்க்­குற்­றச்­சாட்­டு­க் களை நிரா­க­ரித்­தி­ருக்­கின்ற முன்னாள் இரா­ணுவத் தள­பதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா, கலப்பு நீதி­மன்ற விசா­ர­ணையை வர­வேற்­றி­ருக்­கிறார்.
அத்­துடன், தனது கட்­ட­ளையின் கீழ் குற்­றங்கள் இடம்­பெ­ற­வில்லை என்றும், வேறு சிலரின் கட்­ட­ளைப்­படி, அதி­கா­ரிகள் ஒரு­சிலர் செயற்­பட்­டி­ருக்­கலாம் என்றும், அவர்கள் தண்­டிக்­கப்­பட வேண்டும் என்றும் அவர் கூறி­யி­ருக்­கிறார்.
அதே­வேளை, கலப்பு நீதி­மன்றம் அமைக்­கப்­பட வேண்டும் என்ற, பரிந்­துரை பொது­வாக சிங்­கள அர­சியல் தரப்­பு­களால் நிரா­க­ரிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.
(09ஆம் பக்கம் பார்க்க)
சிறப்பு கலப்பு...(08ஆம் பக்கம் பார்க்க)
தமிழ்­மக்­களின் உரி­மைகள் தொடர்­பாக பரிந்து பேசும் விக்­கி­ர­ம­பாகு கரு­ணா­ரத்ன கூட இதனை எதிர்த்­தி­ருக்­கிறார்.
இதற்குப் பதி­லாக உள்­நாட்டு விசா­ர­ணையை ஜன­வ­ரியில் தொடங்கி 18 மாதங்­க­ளுக்குள் நடத்தப் போவ­தா­கவும், 4 பிரி­வு­க­ளாக நல்­லி­ணக்கச் செயற்­பா­டு­களை முன்­ன­கர்த்தப் போவ­தா­கவும் அறி­வித்­தி­ருக்­கிறார் மங்­கள சம­ர­வீர.
இந்த நிலையில், ஐ.நா. விசா­ரணை அறிக்­கையை ஏற்­கவும் முடி­யாத- அதே­வேளை மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்கம் செய்­தது போன்று அதனை முற்­றாக நிரா­க­ரிக்­கவும் முடி­யாத இக்­கட்­டான நிலைக்குள் இலங்கை அர­சாங்கம் சிக்­கி­யி­ருக்­கி­றது.
ஐ.நா. விசா­ரணை அறிக்­கைக்கு அர­சாங்கம் ஜெனீ­வாவில் அளிக்கப் போகும் பதில் அடுத்த கட்ட நட­வ­டிக்­கையை தீர்­மா­னிப்­ப­தாக இருக்கும்.
இந்த விசா­ரணை அறிக்­கையும் சரி, இதனை வெளி­யிட்ட ஐ.நா. மனித உரிமை ஆணை­யா­ளரின் பரிந்­து­ரையும் சரி, சிறப்பு கலப்பு நீதி­மன்றம் அமைத்து குற்­றச்­சாட்­டுகள் குறித்து விசா­ரிக்­கப்­பட வேண்டும் என்றே கூறி­யி­ருக்­கின்­றன.
அறிக்­கை­யிலும் ஐ.நா. மனித உரிமை ஆணை­யா­ளரின் பரிந்­து­ரை­யிலும், சிறப்பு கலப்பு நீதி­மன்றம் அமைக்­கப்­பட வேண்டும் என்று வலி­யு­றுத்­தப்­பட்­டி­ருந்தால் மட்டும் போதாது.
இவர்­க­ளுக்கு அதை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­கான அதி­கா­ரங்கள் இல்லை.
ஐ.நா. மனித உரி­மைகள் பேரவை தான், அடுத்த கட்டம் குறித்து தீர்­மா­னிக்க வேண்டும்
ஐ.நா. மனித உரி­மைகள் பேரவை என்றால், அதில் அங்கம் வகிக்கும் 47 உறுப்பு நாடு­களும் சேர்ந்தே முடி­வெ­டுக்க வேண்டும்.
அதற்கு முன்­ன­தாக, அடுத்து என்ன என்­பதை தீர்­மா­னிக்கும் ஒரு தீர்­மானம் பேர­வையில் முன்­வைக்­கப்­பட வேண்டும்.
அதனை முன்­வைக்கப் போவது வழக்கம் போலவே, அமெ­ரிக்­காவும்,அதன் நட்பு நாடு­களும் தான்.
இலங்கை அர­சாங்­கத்தின் கருத்­தொ­ரு­மைப்­பாட்­டுடன், உள்­நாட்டு விசா­ரணைப் பொறி­மு­றையை வலுப்­ப­டுத்தும் தீர்­மா­னத்தை நிறை­வேற்­ற­வுள்­ள­தாக அமெ­ரிக்கா ஏற்­க­னவே கூறி­யி­ருக்­கி­றது.
அதற்குப் பின்னர் தான், ஐ.நா. விசா­ரணை அறிக்கை கலப்பு நீதி­மன்றம் என்ற பரிந்­து­ரையை செய்­தி­ருக்­கி­றது.
இந்­த­நி­லையில், அமெ­ரிக்கா முன்­வைத்­தி­ருக்­கின்ற முத­லா­வது தீர்­மான வரைவில், கலப்பு நீதி­மன்றம் அமைத்து போர்க்­குற்­றச்­சாட்­டுகள் விசா­ரிக்­கப்­பட வேண்டும் என்றே கோரப்­பட்­டுள்­ள­தா­கவும், அந்த வரைவு இலங்கை அர­சிடம் கடந்­த­வாரம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் தக­வல்கள் கூறு­கின்­றன.
எனினும், கலப்பு நீதி­மன்றம் உட­ன­டி­யாக அமைக்­கப்­ப­டுமா என்ற கேள்வி இருக்­கி­றது.
ஏனென்றால், அதற்கு இலங்கை அர­சாங்­கமும் உடன்­பட வேண்டும், இலங்கை அர­சாங்­கத்தை இப்­போது அர­வ­ணைக்­கின்ற அமெ­ரிக்கா போன்ற மேற்­கு­லக சக்­தி­களும் விரும்ப வேண்டும்.
இலங்கை அர­சாங்­கத்­துக்கு அதிக அழுத்தம் கொடுக்க மேற்­கு­லக சக்­திகள் விரும்­பாது போனால், உள்­நாட்டு விசா­ர­ணைக்கு குறு­கிய கால­அ­வ­காசம் ஒன்றைக் கொடுக்கும் தீர்­மா­னத்தை முன்­வைக்­கலாம்.
ஆனால் அதிலும் ஒரு சிக்கல் உள்­ளது.
இலங்­கையின் தற்­போ­தைய நீதித்­துறைக் கட்­ட­மைப்பு இந்தக் குற்­றச்­சாட்­டு­களை விசா­ரிக்கும் நம்­ப­கத்­தன்மை கொண்­ட­தல்ல என்று ஐ.நா. அறிக்­கையில் கூறப்­பட்­டுள்ள நிலையில், உள்­நாட்டு விசா­ர­ணைக்கு கால­அ­வ­காசம் அளிப்­பது எந்­த­ள­வுக்கு நியா­யப்­பாடு கொண்­டது என்ற கேள்­வியும் உள்­ளது.
எனவே இந்த கலப்பு நீதி­மன்ற பரிந்­து­ரை­யா­னது, அமெ­ரிக்கா உள்­ளிட்ட மேற்­கு­லக நாடு­க­ளையும் கூட சங்­க­டத்தில் தான் சிக்க வைத்­தி­ருக்­கி­றது.
கலப்பு நீதி­மன்­றத்தை அமைக்கப் பரிந்­துரை செய்யும் தீர்­மா­னத்தை பேரவை நிறை­வேற்­றினால் அதற்கு இலங்கை இணங்க வேண்டும்.
அவ்­வாறு இணங்க மறுத்தால் கலப்பு நீதி­மன்­றத்தை அமைத்து விசா­ரிக்க முடி­யாது.
தற்­போ­துள்ள நிலையில், இலங்கை அர­சாங்கம் கலப்பு நீதி­மன்­றத்தை ஏற்றுக் கொள்ளும் நிலையில் இல்லை என்றே கூறலாம்.
ஒட்­டு­மொத்த சிங்­கள அர­சியல் தலை­மை­க­ளுமே, அதனை ஏற்­கத்­தக்க நிலையில் இல்லை.
அது நாட்டின் இறை­மையை மீறிய செய­லா­கவே பார்க்­கின்­றன.
வெளி­நாட்டு நீதி­ப­திகள், வழக்குத் தொடு­னர்கள், சட்­டத்­த­ர­ணிகள் இந்தக் கலப்பு நீதி­மன்­றத்தில் இடம்­பெற வேண்டும் என்று வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது.
இதே­போன்ற கலப்பு நீதி­மன்றம், ஐ.நா. விசா­ர­ணை­களின் முடிவில், கம்­போ­டியா, லெபனான், சாட், கிழக்கு திமோர், சியா­ரா­லியோன் போன்ற நாடு­களில் இடம்­பெற்ற மீறல்கள் குறித்து விசா­ரிப்­ப­தற்­காக அமைக்­கப்­பட்­டுள்­ளன.
கம்­போ­டி­யாவில் கெமரூஜ் கால போர்க்­குற்­றங்கள் குறித்து விசா­ரிக்க அமைக்­கப்­பட்ட மூன்­ற­டுக்கு, கலப்பு நீதி­மன்­றத்தில், தீர்ப்­பு­களை வழங்கும் அமர்வின் தலை­வ­ராகப் பணி­யாற்­றிய நியூ­ஸி­லாந்து நீதி­பதி சில்­வியா கார்ட்ரைட் அம்­மையார், இலங்கை தொடர்­பான ஐ.நா. விசாரணைக் குழுவின் வெளியக நிபுணர்களில் ஒருவராகப் பணியாற்றியிருந்தார்.
அவரது விசாரணை அனுபவங்கள், இந்தப் பரிந்துரையில் முக்கியமான தாக்கத்தைச் செலுத்தியிருக்கும் என்று கருதப்படுகிறது.
ஆனால் இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்தின் படி, வெளிநாட்டு நீதிபதிகள், சட்டத்தரணிகள், விசாரணைகளை மேற்கொள்ள முடியாது.
எனினும், கலப்பு நீதிமன்றம் ஒன்றை அமைக்க சட்டத்தில் இடமுள்ளதாக உதய கம்மன்பி்ல கூறியிருப்பதும் கவனிக்கத்தக்கது.
எவ்வாறாயினும், இம்மாத இறுதியில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானம் தான், அடுத்த கட்டத்தை தீர்மானிப்பதாக இருக்கும்.
கலப்பு நீதிமன்றத்தை அமைக்கும் தீர்மானம் பேரவையில் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டால், அதனை நிராகரிக்கவும் முடியாது ஏற்கவும் முடியாத இக்கட்டான நிலைக்குள் அரசாங்கம் தள்ளப்படும்.
அது மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சோதனையாகவே இருக்கும்.

N.kannan

Theepan N

About Theepan N

கிளிநொச்சி இணையதள பக்கத்துக்கு வரவேற்கின்றோம்.

Subscribe to this Blog via Email :